ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீரில் கத்ராவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஓடும் பேருந்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென எரிந்து பேருந்து முழுவதும் பரவியதாக ஜம்மு ஏடிஜிபி தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக ஜம்மு போலீசார் விசாரணை மேற்கொள்ள ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார்.